தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?-தினமணி தலையங்கம்

Thursday, January 31, 2013
விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற போர்வையில் தினமணி நாளிதழ் முஸ்லிம்களை மீண்டும் வம்புகிழுக்கிறது.

//ஏற்கெனவே, எங்களை ஏதோ தேச விரோதிகள் போலப் பார்க்கிறார்கள். திரைப்படங்களிலும் தொடர்ந்து எங்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும்போது, அதனால் நாங்கள் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கிற முஸ்லிம் சமுதாயத்தினரின் கூற்றில் நியாயம் இருந்தாலும்,
ஒரு கலைஞனின் கருத்து சுதந்திரத்தை எப்படித் தடுக்க முடியும் என்கிற கேள்விக்கு முன்னால் அது அடிபட்டுவிடுகிறது//

அய்யா அறிவுஜீவி எதற்கெடுத்தாலும் கருத்து சுதந்திர தத்துவம் பேசும் உங்களை போன்றவர்கள்,கருத்து சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை உண்டு,அந்த எல்லையை தாண்டிவிட்டால் அந்த கருத்தும் இன்னொருவரை பாதிக்கும்,அவர்கள் மனதை புண்படுத்தும் என்பதை தெரிந்தும் தெரியாததுப்போல மறுப்பதேன்.நல்ல ஒழுக்கமுள்ள குடும்பத்தில் வாழும் ஒருவனை நீ விபச்சாரி மகன்(இந்த வார்த்தைக்கு மக்கள் பேசும் கொச்சை வார்த்தையில் எழுதினால் வீரியம் புரியும் என்றாலும் நான் எழுத விரும்பவில்லை)என்று கூறிவிட்டு நான் எது வேண்டுமானாலும் பேசுவேன் இது என் கருத்து சுதந்திரம் இதில் தலையிடக்கூடாது என்றால்,இதனை கேட்க்கும் ஒருவன் ஏற்றுக் கொள்வானா? ஒருவன் என்ன நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இதுக் கூட புரியாத முட்டாளா நீங்கள்.

//விஸ்வரூபம்' திரைப்படத்தில் இடம்பெறும் தீவிரவாதக் கதாபாத்திரங்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்பதுதான் இந்த எதிர்ப்புக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னால் தீவிரவாதக் கதாபாத்திரங்களை வைத்து வெளியான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? ஒரு முதல்வரை ஊழல்வாதியாக, சாதிப்பிரச்னையைத் தூண்டுபவராக சித்திரித்த "முதல்வன்' திரைப்படம், தமிழக முதலமைச்சரை கேலி செய்வதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒரு மாநிலத்தின் ஆளுநர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து குண்டுவைப்பதாக "காதலன்' படம் வந்தது. அரசு எதிர்க்கவில்லை. அப்படி இருக்கும்போது, "விஸ்வரூபம்' மட்டும் என்ன பாவம் செய்தது, இத்தனை எதிர்ப்புகளை எதிர்கொள்ள?//

முஸ்லிம்களை என்ன கேனையன் என்று நினைத்தீர்களோ நீங்கள் எது சொன்னாலும் நம்பிவிட்டு போக.நீங்கள் மேலே குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் தீவிரவாதிகள் என்று காட்சிப்படுத்துபவர்களை ஒரு மதத்தின் அடையாளங்களை சுமந்திருப்பவர்களாக,அந்த மத நம்பிக்கையில் ஊறி திளைத்தவர்களாக,மதத்தின் பெயரால் பயங்கரங்களை நிகழ்த்தி காட்டுபவர்களாக சித்தரிக்கப்படவில்லை.இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டும்பொழுது மட்டும் ஏன் அவர்களை மதத்தோடு சமந்தப்படுத்துகிரீர்கள் என்று கேட்டால் உங்களை போன்றவர்களிடமிருந்து சத்தத்தையே காணும்.இது தான் நடநிலைவாதமா?ஒருவன் பகவத்கீதையை படித்துவிட்டு துப்பாக்கி தூக்கி கொண்டு போய் அப்பாவி மக்களை கொள்வதுபோல காட்சிப்படுத்தினால் ஹிந்து நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்களா?ஒருவன் பைபிளை படிப்பதினால் தான் தீவிரவாதி ஆனான் என்பது போல காட்சிப்படுத்தினால் கிருஸ்த்தவ நண்பர்கள் ஒத்துக்கொள்வார்களா?

இது அவர்களை கேவலப் படுத்த சொல்லப்பட்ட வார்த்தை அல்ல,உண்மையை சொல்வதென்றால் மதத்தை சம்மந்தப்படுத்தி தீவிரவாத காட்சிகளை வைப்பதே தவறு,அது இஸ்லாமாக இருக்கட்டும் அல்லது வேறு மதமாக இருக்கட்டும்.கமல் இஸ்லாத்தை கொச்சைபடுத்தி எடுப்பதை எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

அவர் மனதை காயப்படுத்தி எடுத்துவிட்டார்கள் என்று குதிக்கும் கமல் எங்களை காயப்படுத்தியது தெரியவில்லையா?ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தை மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவர்கள் என்று காட்டிவிட்டு நான் ஆப்கனிஸ்தான் மக்களை தான் காட்டினேன் என்கிறார் இங்கு நான் கமலுக்கு சொல்லிகொள்வது என்னவென்றால் மொழி,இடம்,நாடு ஆகியவைகளை கடந்தவர்கள் நாங்கள் இஸ்லாமியர்கள்.எங்களுக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள அப்பாவி முஸ்லிம்கள் அடிப்பட்டாலும் வலிக்கும்,அமெரிக்க அப்பாவி முஸ்லிம்கள் அடிப்பட்டாலும் வலிக்கும்.எங்கள் வேதனையை உங்களால் உணர முடியாது.உலகெங்கும் வாழும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்க்காக நசுக்கப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்காக,அவர்களின் முகம் கூட எங்களுக்கு தெரியாவிட்டாலும் அவர்களின் நலனுக்காக இறைவனிடம் கையேந்தி பிரார்த்திக்கும் சகோதர முஸ்லிம்கள் நாங்கள்.

//பொற்கொல்லன் கதாபாத்திரம் தங்கள் சமுதாயத்தினரின் மனதைப் புண்படுத்துவதாக வழக்கு தொடுத்து, சிலப்பதிகாரம் பாடத்திட்டத்தில் இடம்பெறக்கூடாது என்று ஒரு சமூகம் கோரும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நாயர் கதைகள், முல்லாவின் முட்டாள்தனம், சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாவற்றையும் ஓர் இனத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அவற்றுக்கெல்லாம் போராட்டம் நடத்தி,  அவை நீக்கப்பட வேண்டும் என்று கோரினால், சமுதாயத்தில் கலை, இலக்கியமே இல்லாதாகிவிடும்.//

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.ஒருவனை அவன் இனத்தோடு இணைத்து எவ்வளவு கேவலப்படுத்தினாலும் அதை எல்லாம் அவன் கண்டுகொள்ள கூடாது என்று சொல்லவருகிறீர்களா.இனத்தோடு,மதத்தோடு அடையாளப்படுத்தி எடுக்கப்படும் படங்களை அனைத்து சமுதாய மக்களும் எதிர்க்க வேண்டும்.அப்படி மற்ற சமுதாய மக்கள் எதிர்க்கவில்லை என்பதால் நாங்களும் எதிர்க்க கூடாது என்று நீங்கள் நினைத்தால் தவறு.என் தலைவலிக்கு நான் தான் மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் நடித்த "புதிய கீதை"படம் "கீதை'' என்று தான் முதலில் பெயர் சூட்டப்பட்டது.கீதையை குற்றம் சுமத்தும் எந்தக் காட்சியும் அதில் இல்லாவிட்டாலும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததின் பெயரில் "புதிய கீதை"என்று மாற்றப்பட்டது.இதையும் நான் தவறு என்று சொல்லவில்லை அவர்களின் மத அடையாளங்கள் கேலி செய்யாமல் பார்த்துக் கொள்வது அவரவர்கள் வேலை.நான் கேட்பது என்னவென்றால் அப்படி அந்தப்படத்தின் பெயரை மாற்றியதை உங்களை போன்றவர்கள் அது சம்மந்தமாக கேள்வி எழுப்பாதது ஏன்?புரிகிறதா உங்கள் போலி நடுநிலை வாதம்.

//ஒரு கதாபாத்திரம் தமிழ் வசனம் பேசுவதை நியாயப்படுத்துவதற்காக, அவர் தமிழகத்தில் தங்கியிருந்தபோது தமிழ் படித்தேன் என்று சொன்னால், அது தமிழக முஸ்லிம்கள் அவருக்கு ஆதரவு அளித்ததாகக் கருதுவது சரியல்ல. ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு ராமகிருஷ்ணன், க்விங் லீ, கிறிஸ்டோபர் மார்லோ என்றா பெயர் வைக்க முடியும்? படத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு பதில், அவர்கள் ஆப்கானிஸ்தானியர்கள், தலிபான்கள் என்று பார்ப்பதுதானே சரி.//

தினமணியே நீயென்ன முட்டாளா அல்லது எங்களை முட்டாள் என்கிறாயா?முல்லா உமர் தமிழகத்தில் தங்கி இருந்ததாக சொல்வதாக படத்தில் காட்சிப்படுத்தவில்லை.பதுங்கி இருந்ததாக தான் சொல்கிறார் இதனை வெளி மாநிலங்கள்,வெளி நாடுகளில் படத்தை பார்த்தவர்கள் சொன்னது.பதுங்குவதர்க்கும்,தங்கிருந்தார் என்பதற்கும் வித்தியாசம் அதிகம்.ஒரு வேளை தங்கிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும் அப்படியே ஹாயாக இங்கு வந்து தங்க அவர் என்ன சுற்றுலா பயனியா?வேலை தேடி வந்தவரா?யாராவது அடைக்கலம் கொடுத்தால் தானே இங்கு தங்க முடியும். தமிழகத்தில் தங்க தமிழ் நாட்டுகாரன் உதவாமல் தாய்லாந்த்காரனா உதவிருப்பான்!!!ஒரு வேளை தமிழக முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கமல் சொல்ல வருகிறாரோ என்று எங்களை யோசிக்கவைகின்றது. அதையே தான் நீயும் சொல்ல வருகிறாயோ என்ற எண்ணமும் எங்களுக்கு எழுகிறது.

ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் வாழ்கை எந்தளவிற்கு மனித நேயமிக்கது.அவர்களை இந்த உலகிற்கு எப்படி காட்டுமிராண்டிகளாக காட்டப்படுகிறார்கள் என்று கிருஸ்த்தவாதத்திலிருந்து மதம் மாறிய இங்கிலாந்த் பத்திரிகை நிருபர் சகோதரி.யுவானி ரிட்லி அவர்களின் ''தலிபான்களின் பிடியில்'' என்ற புத்தகத்தை வாசித்தவர்களுக்கு தெரியும்.


இஸ்லாமியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோள்:குட்ட,குட்ட குனிந்துக் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தின் உண்மை நிலையை இந்த உலகம் அறிவது என்று?
ஒரு பக்கம் ஆர்ப்பாட்டங்களிலும்,இன்னொருபக்கம் விவாதங்களிலும் ஈடுபடும் நாம் நிரந்தர தீர்வை நோக்கி நகர்வது என்று?
 
சினிமா துறையை நம் கையிலெடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது. ஆபாசமில்லா,அருவருக்கத்தக்க காட்சி இல்ல படம் எடுப்போம்.இந்திய சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகம் என்ன,முஸ்லிம்களின் மனித நேயம்,தீவிரவாதத்தை வெறுக்கும் இஸ்லாம் இன்னும் இதுப்போல பல விசயங்களை இந்த ஊடகத்தின் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கலாம். நமக்கெதிராக திசை திருப்பப்படுகிறது ஊடகம் என்று கூறி கொண்டுமட்டுமில்லாமல் ஊடகத்தை நம் கையிலெடுத்து அதன் பாதையை மாற்றுவோம் இன்ஷா அல்லாஹ்,ஆனால் இந்த பெரும் முயற்சி இஸ்லாமிய அமைப்புகளின் உதவி பெறாமல் வெற்றி அடைவது கடினம்.காலத்தின் கட்டாயம் கருதி அமைப்புகள் இதற்க்கு எல்லா வகையிலும் உதவி புரிய முன்வர வேண்டும்,அப்படி அவர்கள் செயாலாற்ற அல்லாஹ் அருள்பாளிக்கட்டும்.



தினமணியின் தலையங்கம் படிக்க


 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

2 comments:

  1. ஸலாம் சகோ.தி.முஸ்லிம்,

    //(இந்த வார்த்தைக்கு மக்கள் பேசும் கொச்சை வார்த்தையில் எழுதினால் வீரியம் புரியும் என்றாலும் நான் எழுத விரும்பவில்லை)//

    அதாவது நீங்கள் உங்களின்' சுய கருத்து சுதந்திரத்தை' பயன் படுத்திக்கொள்ள வில்லை. ஏனெனில், இங்கே படிக்கும் நல்லுள்ளம் கொண்டோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். இந்த கட்டுப்பாடுதான் நாம் பிறரிடமும் எதிர்பார்ப்பது..!

    // என்கிற முஸ்லிம் சமுதாயத்தினரின் கூற்றில் நியாயம் இருந்தாலும்,//

    அதாவது முஸ்லிம்களின் தர்ம சங்கடத்தை விட... பாழாய்ப்போன தனது கருத்து சுதந்திரம்(?) தான் முக்கியம் என்றாகி விட்டது..! இதைத்தான் நாம் எதிர்க்கிறோம்..!

    அருமையான இடுகை. நன்றி சகோ.

    இடிப்ப்பாரை இல்லாத ஏமரா மன்னன்....
    கதியாக தினமணி என்றாகி விடக்கூடாது.
    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  2. வ அலைக்கும் சலாம்,

    நொந்து கிடக்கும் நம் சமுதாயத்தை சுரண்டி பார்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது.
    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஆஷிக்..

    ReplyDelete